தேசிய செய்திகள்

மணிப்பூர் வன்முறை வழக்குகள்: சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்டு

வன்முறை வழக்குகள் குறித்த நிலை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில் புதிய அரசு அமைந்தபின் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. அங்குள்ள உக்ருல் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் மீண்டும் தாக்குதல், தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் மாநில போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படைகள் இணைந்த கூட்டுக்குழுவினர் அமைதி ஏற்படுத்தும் பணிகளில் இறங்கி உள்ளனர்.

இந்த சூழலில் உக்ருல் மாவட்டத்தின் லிட்டன் சரைகோங் பகுதியில் நேற்று காலையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. தங்குல் நாகா கிராம தன்னார்வலர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுபோன்ற மோதல்களைத் தடுக்க, வதந்திகளைப் பரப்புவதை தவிர்க்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மணிப்பூர் வன்முறை வழக்குகள் தொடர்பான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது மணிப்பூர் இன வன்முறை வழக்குகள் குறித்த நிலை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் மணிப்பூர் மற்றும் குவகாத்தி ஐகோர்ட்டுகள் விசாரணைகளை கண்காணிக்கலாம் என்றும், மறுவாழ்வு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை கேட்டுக் கொண்டது.

SCROLL FOR NEXT