தேசிய செய்திகள்

சிறப்பு அந்தஸ்து ரத்து: 4 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி வெளியிட்டார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 370-வது பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கவுள்ளது.

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

SCROLL FOR NEXT