புதுடெல்லி,
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்த நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜூ மற்றும் மத்திய இணை மந்திரி ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதற்கான கடிதத்தினை கடந்த 8ந்தேதி நடந்த பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அவரிடம் வழங்கினர்.
ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமர் மோடி ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேசினார். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜூ வகித்து வந்த விமான போக்குவரத்து துறையை பிரதமர் நரேந்திரமோடி தனது பொறுப்பில் நேற்று முதல் கவனித்து வந்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விமான போக்குவரத்து துறையை கவனிக்கும்படி சுரேஷ் பிரபுவுக்கு உத்தரவிட்டு உள்ளார். அவர் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த நிலையில், பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த துறையையும் கூடுதலாக கவனித்திடுவார்.