மீரட்,
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இந்திய விமானப்படையின் 'சூர்யகிரண்' விமான சாகச குழு முதன்முறையாக நடத்திய பிரம்மாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சி நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் இந்த வீர தீர சாகச காட்சியை காண மாணவர்கள், என்.சி.சி மாணவர்கள், ஸ்கவுட் இயக்கத்தினர் உட்பட 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டனர்.
இன்று நடைபெற்ற இறுதி நாள் சாகச நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு துறை இணைமந்திரி சஞ்சய் சேத் நேரில் கண்டுகளித்தார். இதுகுறித்து தனது 'எக்ஸ்'சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த சாகச நிகழ்வு ஒழுக்கம், துல்லியம் மற்றும் குழுப்பணியின் அசாத்திய கலவை. இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற திறன்களுக்கு இது ஒரு சிறந்த சான்று" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சாகசத்தின் முதல் நாளான நேற்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "மூவண்ணக் கொடியின் நிறங்களால் வானத்தை அலங்கரித்த விமானிகளின் துணிச்சலும் துல்லியமும் பிரமிக்க வைக்கிறது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமைமிக்க தருணம்" என பாராட்டியுள்ளார்.
கடந்த 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யகிரண் சாகச குழு, ஆசியாவிலேயே 9 போர் விமானங்களை ஒரே நேரத்தில் இயக்கி சாகசம் செய்யும் ஒரே வானூர்தி குழு என்ற உலகளாவிய பெருமையை பெற்றுள்ளது. வெறும் சாகச குழுவாக மட்டுமல்லாமல், 'இந்திய விமானப்படையின் தூதுவர்கள்' ஆக விளங்கும் சூர்யகிரண், தான் பறக்கும் இடமெல்லாம் நாட்டின் பாதுகாப்பு திறனை பறைசாற்றி வருகிறது.