தேசிய செய்திகள்

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

முன்னதாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.

அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இன்று (சனிக்கிழமை) பதவியேற்றது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது.

சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் தாமி ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டநிலையில், கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல அடுக்கு பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருந்தன.