புதுடெல்லி,
வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இன்று காலை டெல்லிக்கு அருகில் உள்ள குருகிராம் நகரம் வரை படையெடுத்த வெட்டுக்கிளிகள், சிறிது நேரத்தில் டெல்லி புறநகர் பகுதியை வந்து அடைந்தன.
இது குறித்து டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் , தலைநகர் டெல்லியின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் நிர்வாகங்கள் அதிஉயர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மக்கள் வீடுகளின் ஜன்னல்களை பூட்டி வைக்குமாறு டெல்லி அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதேபோல், வாய்ப்பிருந்தால் செடிகளை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக இன்று காலை அரியானா மாநிலம் குருகிராம் பகுதிக்குள் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. வானத்தை மறைக்கும் அளவுக்கு பெரும் கூட்டமாக இவை பறந்து சென்றன.
லட்சக்கணக்கில் பறந்துவந்து சில மணி நேரங்களில் ஏராளமான பயிகளை சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கு குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், தலைநகர் டெல்லி புறநகர் பகுதி வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது, அண்டை மாநில மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.