தேசிய செய்திகள்

சுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளரை மும்பைக்கு அழைத்து சென்ற போலீஸ்

சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

பிபவ் குமாரை கைது செய்தபோது அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே பிபவ் குமார் தனது செல்போன் தரவுகள் அனைத்தையும் அழித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது 5 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாரை மும்பைக்கு அழைத்துச் சென்று அவரது செல்போன் தரவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

SCROLL FOR NEXT