தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து சுவிட்சர்லாந்து கிளம்பிய விமானத்தில் தீ- 6 பயணிகள் காயம்

அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரிய தீ விபத்து அச்சம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரத்திற்குச் செல்ல இருந்த ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எல்.எக்ஸ் 147 விமானத்தின், லேண்டிங் கியரில் இருந்து திடீரென புகை வெளியேறியது. மற்றொரு லேண்டிங் கியர் அருகே தீப்பற்றியதும் காணப்பட்டது. விமானம் புறப்படத் தயாராக ரன் வேயில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதையடுத்து விமானத்தின் புறப்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 6 பயணிகள் காயமடைந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தின் ஒரு என்ஜினில் ஏற்பட்ட கோளாறே புகை வெளிப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனடியாக விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின.தீ விபத்து ஏற்பட்ட விமானம் ஏர்ப்ஸ் A330-343 வகையைச் சேர்ந்தது. இந்த விமானத்தில் 232 பயணிகளும் 13 சிப்பந்திகளும் இருந்தனர்.