தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் முறையீடு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள வல்லக்கடவு - முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. "முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தவும். பராமரிப்பு பணிகளுக்கும் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தர விட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல தமிழகத்துக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள வல்லக்கடவு - முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவை அளவிடும் கருவிகளை பொருத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விரைந்து விசாரிக்க வேண்டும்

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் மரங்களை வெட்ட கேரள அரசு வழங்கியுள்ள அனுமதியை பரிசீலித்து, சுற்றுச்சூழல் அனுமதிக்கான முடிவை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனிடையே, இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டபோது. விசாரணையின் நிறைவாக மூத்த வக்கீல் ஜி. உமாபதி, இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். மனு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் விசாரிக்கிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.