லக்னோ,
ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் பரிந்துரைக்கும் அதிகாரிகளின் பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கீகரித்த பின், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுக்கு, உத்தரபிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.முனிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 12 அதிகாரிகள் இந்த உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முனிராஜ். தனது கடின உழைப்பால் குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, உத்தரபிரதேச மாநிலப் பிரிவு தனது காவல் பணியை தொடங்கினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, அங்கு ரவுடிகளை ஒழித்துக்கட்டும் வேட்டையில் முனிராஜ் மிக சிறப்பாகச் செயல்பட்டார். பல்வேறு அதிரடி என்கவுண்டர்களை நடத்தி அம்மாநில குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இவரது துப்பாக்கி சூடு நடவடிக்கைகளால், உ.பி.யின் 14 முக்கிய குற்றவாளிகள் வீழ்த்தப்பட்டனர்.
ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதால், உத்தரபிரதேச காவல் துறையிலும், மக்கள் மத்தியிலும் இவர் 'உ.பி. சிங்கம்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தையே உலுக்கிய பிரபல ஆள் கடத்தல் கும்பலின் தலைவர்களான பதன்சிங், அக்ஷய் சிங் ஆகிய இரு குற்றவாளிகளையும் அதிகாரி முனிராஜ் சுட்டுக் கொன்றார். மேலும், அவர்களது பிடியில் தவித்து வந்த பிரபல மருத்துவர் உமாகாந்த் குப்தாவை பத்திரமாக மீட்டெடுத்தார்.
முனிராஜ் ஐ.பி.எஸ்.-இன் இந்த வீர தீர செயலை பாராட்டியே, தற்போது அவருக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக மண்ணில் பிறந்து, வடமாநிலத்தில் ரவுடிகளை அலறவிட்டு ஜனாதிபதி விருது பெறும் அதிகாரி முனிராஜிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.