தேசிய செய்திகள்

தமிழ்நாடு மின்வாரிய உறுப்பினர் நியமன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தமிழ்நாடு மின்வாரிய உறுப்பினர் நியமன விவகாரம் குறித்த வழக்கினை, அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, பொதுவான நபர் நியமிக்கப்படுவார் என அரசாணை வெளியிட்டுள்ளதாக கூறி, வக்கீல் நிர்மல் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, காலியாக உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பதவியை நிரப்ப இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தற்போது இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும் வகையில் பட்டியலிடுமாறு கோரிக்கை விடுத்தார். தற்போது இந்த வழக்கை விசாரிப்பதில் அவசரம் ஏதுமில்லை என்று கூறிய நீதிபதிகள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

SCROLL FOR NEXT