புதுடெல்லி,
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் எத்தியோப்பியா விமானத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இறங்கிய பயணி ஒருவரை பார்த்து மோப்பநாய் குரைத்தது. உஷாரான அதிகாரிகள் அவர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான பாட்டில்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது மதுவில் கொகைன் வகை போதைப்பொருள் 1 கிலோ அளவில் கலந்திருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தான்சானியா நாட்டை சேர்ந்த அவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.18 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.