தேசிய செய்திகள்

டவ்தே புயல்:உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்- பிரதமர் மோடி அறிவிப்பு

டவ்தே புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி குஜராத் சென்றார். பவ் நகர் சென்ற அவரை, முதல்வர் விஜய்ரூபானி வரவேற்றார்.

காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்து வருகிறார்

பின்னர், புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட உனா, டியூ, ஜபராபாத், மஹூவா உள்ளிட்ட பகுதிகளை மோடி விமானம் மூலம் பார்வையிட்டு பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர், மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்ரூபானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரண பணி ஆகியவை குறித்து விளக்கினர்.

இதன் பின்னர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:

'டவ்தே' புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய அரசு துணை நிற்பதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் அரசு உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும். மாநிலத்தில் பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழுவை குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை