கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆசிரியர் தாக்கியதில் 8-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்தோய்,

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த 8-ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின், பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஷாமா. இவரை கடந்த 20-ந்தேதி ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி பரூக்காபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி மாணவி ஷாமா உயிரிழந்தார்.

முன்னதாக மாணவியை ஆசிரியர் தாக்கியது தொடர்பாக மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், மாணவி ஷாமா 20-ந்தேதி அன்று தேர்வுக்காகப் பள்ளிக்குச் சென்றபோது, ​​வகுப்புத் தோழியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஷாமா வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியர் காரணங்கள் எதையும் கேட்காமல் ஷாமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவி பலத்த காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த புகாரின் பேரில் போலீசார் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்‌ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் வகுப்புத் தோழி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT