தேசிய செய்திகள்

தெலுங்கானா: 17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - முதியவர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் ராஜேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மதுராநகர் பகுதியில், இன்று காலை 11 மணியளவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் சாலையோரம் நின்றிருந்த 7 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 60 வயது முதியவர் ராஜேந்திர குமார், அவரது சகோதரர் பிரபாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ராஜேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபாகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து நடந்த சமயத்தில் காரில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.