மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராம கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கோயிலின் முன்பகுதியில் அமைந்திருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பர்பானி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “கோயிலின் சபா மண்டபத்தின் மேற்கூரை பிற்பகல் 3.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன” என்றார்.