புதுச்சேரி,
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் மாநில செயலாளர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதற்கிடையே, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக சலீம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
அதே நேரத்தில் த.வெ.க. கூட்டணி சார்பிலும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இந்திய கம்யூனிஸ்டு நிலைப்பாடு என்ன? யார், யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கூறுகையில், 'நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த முறை தேர்தலில் உறுதியாக போட்டியிடுகிறோம். இதற்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம்.
சென்னையில் த.வெ.க. பொது செயலாளர் ஆனந்தை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்துள்ளோம். த.வெ.க. உட்பட பிற கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றார்.
தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் காணுவதால் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.