புதுடெல்லி,
சுவாமி சித்பவானந்தாவின் எண்ணோட்டத்தில் உருவான பகவத் கீதை வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, பகவத் கீதை நம்மை சிந்திக்க வைக்கிறது. கேள்விகள் கேட்க தூண்டுகிறது.
விவாதம் மேற்கொள்ள ஊக்கப்படுத்துகிறது. நம்முடைய மனம் திறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும் மற்றும் ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருந்திடுவார்கள்.
கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்டபொழுது, இந்தியாவால் என்ன முடியுமோ அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் சென்றுள்ளன.
நாம் மனிதகுலத்திற்கு உதவவும், குணமளிக்கவும் விரும்புகிறோம். இதனையே கீதை நமக்கு போதனை செய்கிறது. நமக்கு மட்டுமின்றி பெரிய அளவிலுள்ள மனிதகுலத்தின் சுகாதாரம் மற்றும் மதிப்புகளை உருவாக்குதல் என்பதனை ஆத்மநிர்பார் பாரத் ஆனது மைய நோக்காக கொண்டுள்ளது. அது உலகிற்கே நல்லது என நாம் நம்புகிறோம் என்று பேசியுள்ளார்.