தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது

கர்நாடக அணைகளில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டுக் கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி கர்நாடக அரசுக்கு ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவு பிறப்பித்தார். அதாவது தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்ட நிலையில், வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி அடுத்த நாட்களில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என தெரிவித்து கர்நாடக அரசு, ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது. தற்போதைய நிலவரப்படி 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தால் கர்நாடகத்தில் குடிநீர் வினி யோகம் கடும் சிரமங்களை சந்திக்க கூடும் என கர்நாடக அரசு தெரிவித்தது. எனவே தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

இதுபற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இதில் தமிழ்நாட்டின் நீர்ப்பாசன சூழ்நிலைகள் ஆலோசிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளதையொட்டி காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் முன்னதாக கூடி, இரு மாநிலங்களின் நீர் இருப்பு விவரங்களையும், மழை விவரங்களையும் மதிப்பிடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT