எல்பிஜி சிலிணடர் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி செய்வதற்கு முதல் முறையாக இலக்கு நிர்ணயித்த மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள 21 பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் கூட்டு உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 63,810 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது.

புது டெல்லி,

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நாளொன்றுக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி செய்ய முதல்முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கட்டாய இலக்கு நிர்ணயித்துள்ளது.

எல்பிஜி தட்டுப்பாடு- மத்திய அரசு நடவடிக்கை

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பிராந்திய மோதல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோா்முஸ் நீரிணை மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் எல்பிஜி விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை எதிர்கொள்ளும் நோக்கில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

அரசு- தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள 21 பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் கூட்டு உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 63,810 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஒருநாள் நுகர்வில் சுமார் 70 சதவீதத் தேவையைப் பூர்த்தி செய்யும். இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாயரா எனர்ஜி போன்ற தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் தனித்தனியான உற்பத்திப் பங்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு மற்றும் விநியோக அட்டவணையானது, மாறிவரும் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் முறைப்படி புதுப்பிக்கப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், சர்வதேச சந்தை நிலவரங்களால் உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த புதிய உற்பத்தி இலக்கு பெரிதும் உதவும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.