புதுடெல்லி,
பசுக்களை கடத்துபவர்கள், குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அப்பாவிகளை கும்பலாக சேர்ந்து அடித்துக்கொல்லும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், கும்பலால் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றி யோசனை கூறுவதற்காக, மத்திய உள்துறை செயலாளார் ராஜீவ் கவுபா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது.
இக்குழு, தனது சிபாரிசுகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழுவிடம் சமர்ப்பிக்கும். அவற்றை மந்திரிகள் குழு பரிசீலனை செய்து, தனது பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் தாக்கல் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.