கவுகாத்தி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் அவர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது, 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் பிரிவு வாரியாக விவாதிக்க தயார் எனக்கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களுடன் ஒவ்வொரு பிரிவாக விவாதிப்பதற்கு அரசு தயாராகவே இருக்கிறது என்று கூறினார்.
அந்தவகையில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு இன்னும் தயாராகவே இருக்கிறது என உறுதியாக தெரிவித்த தோமர், எனினும் இரு தரப்பினருக்கு இடையேயான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.