குடகு:
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா கிருகூர் கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி லாரியில் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் ஜோடுபிடி கிராமத்தின் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று, போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று விரட்டி மடக்கி பிடித்தனர். அப்போது தான் லாரியில் மரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த நாபொக்லு பகுதியை சேர்ந்த அப்பாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள், ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.