Image Courtesy : PTI 
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் ஆக்சிஜன், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருப்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT