தேசிய செய்திகள்

சபரிமலையில் பழமையான ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது; பக்தர்கள் பீதி

சபரிமலையில் பழமையான ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால், பக்தர்கள் பீதி அடைந்தனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புனிதமிக்க 18-ம் படிக்கு முன்பு பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலமரம் நேற்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதில் இருந்து அதிகமான புகை வெளியேறியது. இதைப்பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதன் பிறகுதான் பக்தர்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அருகில் உள்ள ஹோம குண்டத்தில் இருந்து வெளியேறிய தீயால் இந்த விபத்து நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ததால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அய்யப்பன் கோவிலில் உள்ள ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.