புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரியின் முயற்சியால் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி என்ற மருந்து வார்தாவில் உள்ள ஜெனிடிக் லைப் சையின்சஸ் என்ற நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்காக மருந்து உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் இதுவாகும். இந்த நிலையில், இந்த மருந்து விற்பனை வருகிற திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்த மருந்து ஒன்றின் விற்பனை விலை ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய மந்திரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.