Image Courtesy : PTI 
தேசிய செய்திகள்

டெல்லியை நோக்கி பேரணி தொடரும்; 10-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் - விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி நோக்கி பேரணி செல்லும் திட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் டெல்லியை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையிலான எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த 21-ந்தேதி விவசாயிகள் மற்றும் போலீசாரிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தலைநகர் டெல்லி நோக்கி பேரணி செல்லும் திட்டம் தொடரும். அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் எங்கள் பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் வருகிற 6-ந்தேதி ரெயில், பேருந்து, விமானம் மூலம் நாடு முழுவதிலும் இருந்து டெல்லிக்கு வருவார்கள். தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை பெறும் வகையில் மார்ச் 10-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து