அமித்ஷா 
தேசிய செய்திகள்

எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது - அமித்ஷா

இந்தியா-வங்காளதேச எல்லைக்கு வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை முந்தைய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வழங்கவில்லை என அமித்ஷா கூறினார்.

கொல்கத்தா,

எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

திறந்த எல்லையைப் பாதுகாக்கும் எஸ்.எஸ்.பி. வீரர்களின் பணியே மிகவும் கடினமானது என்று நான் எப்போதும் கூறுவேன். தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் சிலிகுரி வழித்தடத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அரசு அங்கீகரித்துள்ளது. இது 8 மாநிலங்களை இணைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாகும். மேலும், நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளின் சர்வதேச எல்லைகள் இங்கு சந்திக்கின்றன. நாங்கள் சோப்ரா, கிஷன்கஞ்ச் மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் நமது பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.

நாட்டின் பாதுகாப்பு

பிஎஸ்எப்-க்கு நிலம் ஒதுக்குமாறு மம்தா பானர்ஜியிடம் நாங்கள் அயராமல் வேண்டுகோள் விடுத்தோம், ஆனால் அவர் பதவி விலகும் வரை அவ்வாறு செய்யவில்லை. நான் ஒருமுறை அவரது அலுவலகத்திற்கே சென்று, இந்த நிலம் பிஎஸ்எப்-க்கானது, பாஜக-வுக்கானது அல்ல என்று அவரிடம் விளக்கியிருந்தேன்

பிஎஸ்எப் மூலம் எல்லை வேலி அமைப்பதற்கான நிலத்தைக் கேட்டு, மம்தா பானர்ஜியிடம் நான் விடுத்த தீவிர கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் போயின; எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது.

பாஜக அரசு

பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியா-வங்காளதேச எல்லைக்கு வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை முந்தைய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வழங்கவில்லை. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 2014ம் ஆண்டு முதல் நான் கேட்டு வந்த 1,129 ஏக்கர் நிலம் தற்போது முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னரே கிடைத்தது.

'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவம்

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசியப் பாடலான 'வந்தே மாதரத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்காத முந்தைய அரசுகளின் செயல் குறித்து நான் வருத்தம் அடைந்தேன். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் பாடப்படும் வரை, 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவம் இந்தியாவில் ஒருபோதும் பாடப்படவில்லை.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இப்பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆன நிலையில், தேசம் இறுதியாக இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது எனக்கு ஆறுதல் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.