தேசிய செய்திகள்

பா.ஜனதா மூத்த தலைவர்கள் போர்க்கொடி - எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது

துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பா.ஜனதா மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார்.

அதன்பிறகு கடந்த 20-ந் தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டனர்.

மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்த் கார்ஜோள், புதுமுகங்கள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த மந்திரிகள் ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முன்பு முதல்-மந்திரியாக பணியாற்றிய தனக்கு தற்போது துணை முதல்-மந்திரி பதவி கூட வழங்கவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோர் தங்களுக்கு மீண்டும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. கூட்டணி அரசு கவிழ்ந்ததில் ஆர்.அசோக்கின் பங்கு முக்கியமானது.

ஆர்.அசோக் தனது அதிருப்தி குறித்து யாரிடமும் பேசாமல் வீட்டில் மவுனமாக இருந்தார். நேற்று பா.ஜனதா புதிய தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு ஆர்.அசோக்கை முதல்-மந்திரி எடியூரப்பா அவரது வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்தி தனது காரில் அழைத்து வந்தார்.

இன்னொரு மூத்த தலைவர்களில் ஒருவரான மந்திரி சி.டி.ரவி, தனக்கு முக்கியத்துவம் இல்லாத சுற்றுலா துறையை ஒதுக்கியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனக்கு வழங்கப்பட்ட அரசு காரை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்லாரியில் விவசாய விளைபொருட்களை சந்தை அருகே சாலையில் கொட்டியும், நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தும் போராட்டம் நடத்தினர். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

அதேபோல் ஒசப்பேட்டை நகர் மற்றும் கொப்பல், சித்ரதுர்கா, யாதகிரி மாவட்டங்களிலும் ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் சாலையை மறித்து டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

பா.ஜனதா மேலிடம் பலம் வாய்ந்த தலைமையை கொண்டுள்ளதால், அதிருப்தியாளர்கள் தங்களின் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மாநில அரசுக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளதால், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முதல்-மந்திரி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பா.ஜனதா மேலிடம், கட்சியின் முடிவே இறுதியானது என்றும், அதிருப்தியாளர்களை சரிசெய்து ஆட்சி நிர்வாகத்தை சுமுகமாக நடத்த வேண்டும் என்றும் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்டு போராட்டம் நடத்திய ஆதரவாளர்களை மந்திரி ஸ்ரீராமுலு கண்டித்துள்ளார்.

யாரும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை