புதுடெல்லி,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்து உள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்தவக்கீல் முகுல் ரோகத்கி வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் அறையில் வேறு வழக்குகளை விசாரித்து கொண்டு இருந்ததால் கோர்ட்டு அறையில் இந்த விசாரணை தொடங்க சிறிது காலதாமதமானது. வாதங்களுக்கு குறைந்த நேரமே இருந்ததால் இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.