தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் செல்வேன் என அடம்பிடித்த மனைவி... கணவர் செய்த விபரீத செயல்

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை போலீஸ்காரர் சமாதானம் செய்தார்.

நகரி,

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் தும்மன் பள்ளியை சேர்ந்தவர் சித்தாரெட்டி (வயது 35). இவர் ஜாகிராபாத்தில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (29), தையல் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 9 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

இதற்கிடையில், கவிதாவுக்கு திருப்பதியை அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்த பவன்குமார் ரெட்டி (32) என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து கவிதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த மாதம் 27-ந்தேதி கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஜட்செர்லாவில் தங்கி இருந்த பவன்குமார் ரெட்டியிடம் சென்றுவிட்டார். இதையடுத்து மனைவியை காணவில்லை என சித்தாரெட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், கவிதா ஜட்செர்லாவில் இருப்பதை கண்டுபிடித்தனர். மனைவியை அழைத்து வர சித்தாரெட்டி, போலீஸ்காரர் காதிர் என்பவருடன் காரில் ஜட்செர்லா சென்றனர்.

அங்கு கவிதா மற்றும் பவன்குமார் ரெட்டிக்கு போலீஸ்காரர் அறிவுரை வழங்கினார். கணவருடன் செல்லும்படி அறிவுறுத்தினார். கள்ளக்காதலனை விட்டு வர முடியாது என கூறிய கவிதா தனது கணவனை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் போலீஸ்காரர் சமாதானம் செய்தார்.

பின்னர் போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து, கவிதா ஜாகிராபாத்துக்கு வர சம்மதித்தார். காரின் முன் இருக்கையில் போலீஸ்காரரும், பின் இருக்கையில் கவிதா, சித்தா ரெட்டி, பவன்குமார் ரெட்டி ஆகியோர் அமர்ந்து கொண்டனர். சதாசிவபேட்டை அருகே வந்தபோது டீக்கடையில் காரை நிறுத்தினர். அப்போது சித்தாரெட்டி, அங்குள்ள கடைக்கு சென்று கத்தி வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்.

டீ குடித்த பின்னர் காரில் புறப்பட்டனர். தனது மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி திடீரென கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சித்தாரெட்டியிடம் இருந்த கத்தியை பிடுங்கினார். அதற்குள் கவிதாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.

அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தாரெட்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.