பெங்களூரு
ராமர் கோவில் திருட்டு தொடர்ச்சியாக, அனைத்து கோவில்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை வைக்க கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பெருமளவில் திருடப்பட்டு உள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு வழங்கிய முதற்கட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் நடந்தன.
இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக அவினாஷ் சுக்லா (வயது 30) அடையாளம் காணப்பட்டு உள்ளார். விசாரணை அறிக்கையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள இவர், 40 நாட்களில் 70 முறை ராமர் கோவில் காணிக்கையை திருடி உள்ளார்.
காணிக்கை எண்ணும் பணியின்போது, பெரிய மதிப்பு கொண்ட பணக்கட்டுகளையும், சில்லறை ரூபாய் நோட்டுகளையும் திருடி மறைப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அவினாஷ் சுக்லாவுக்கு பெரும் பங்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அவரது வீட்டில் இருந்து அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த வகையில் ரூ.20.39 லட்சம் பணம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. காணிக்கை எண்ணும் பணிக்காக ரூ.15 ஆயிரம் மட்டுமே அவினாஷ் சுக்லா சம்பளமாக பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ராமர் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட பொருட்கள் திருடப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், மாநிலத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து பெரிய கோவில்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை வைக்கும்படி அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டு உள்ளார்.
பணம் வசூலிக்கும் மற்றும் எண்ணும் பகுதி உள்பட கோவிலின் அனைத்து பகுதிகளிலும் 24 நேரமும் கேமராக்கள் இயங்க வேண்டும் என அவர் கூறினார். கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.