திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் நெய்யாற்றின்கரையை அடுத்த விளாத்தங்கரையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 36). இவர் கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அல்மா (33). இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லாததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தனது மனைவியை குத்தி கொன்று விட்டதாக பக்கத்து தெருவில் வசித்து வந்த தனது சகோதரனிடம் விஷ்ணு தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அல்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஷ்ணுவையும் கைது செய்தனர். குடும்ப தகராறில், மனைவியை அவர் கத்தியால் குத்தி கொன்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்மாவின் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து கைதான விஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை ஆசிரியர் குத்திக் கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.