புதுடெல்லி,
ஆன்லைன் விளையாட்டு மோசடி தொடர்பாக மராட்டியம், கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 3 மாநிலங்களிலும் தன் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளை தள்ளுபடி செய்யவோ அல்லது பல்வேறு பிரிவுகளில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கவோ உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் மாசி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். முன்னதாக விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
தற்போதைய சைபர் மோசடிகள், பல வங்கிக்கணக்குகள், போலியான அடையாளங்கள் மற்றும் வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் டிஜிட்டல் நெட்வொர்க்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான வழிமுறைகள் மூலம் நடக்கின்றன. இத்தகைய குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காக, எலக்ட்ரானிக் ஆதாரங்களின் விரிவான தடயவியல் பரிசோதனை, வங்கிப்பரிவர்த்தனைகளின் பகுப்பாய்வு மற்றும் பணப் பரிமாற்றங்களை கண்டறிதல் ஆகியவை அவசிய தேவையாகின்றன.
சைபர் மோசடிகள் இப்போது அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த குற்றங்களின் தீவிரத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு, இவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் அறியாமையால் இந்த குற்றங்களில் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வறுமையை போக்குவதற்காக இதுபோன்ற குற்றவாளிகளால் ஈர்க்கப்படும்போது மேலும் சிக்கலாகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.