ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அனந்த்நாக்கின் பஹல்கம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீசண்ட் டாப் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.