தேசிய செய்திகள்

திருப்பதி: பெற்றோர் கூட்டத்திற்கு குடித்துவிட்டு வந்த தலைமை ஆசிரியர்

ஆசிரியர் போதையில் பெஞ்ச்சில் கிடக்கும் காட்சியை அங்கிருந்த பெற்றோர் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

திருப்பதி,

பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ஒருவர் போதையில் தள்ளாடியபடி வந்த சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், சிந்தப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பிரபாடு கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்த பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

போதையில் தள்ளாட்டம்

காலை முதலே தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பேச மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளி வளாகத்திற்குள் திரண்டு வந்து காத்து இருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணா, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, நேராக நடக்க கூட முடியாமல் தள்ளாடியபடி வந்துள்ளார்.

பெற்றோர்கள் கொந்தளிப்பு

அறைக்குள் நுழைந்த அந்த தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் முன்னிலையிலேயே அங்கிருந்த பெஞ்ச் மீது சுருண்டு விழுந்து படுத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், ஆசிரியரின் இந்த பொறுப்பற்ற செயலைக்கண்டு ஆவேசமடைந்தனர். "இப்படிப்பட்டவர்கள் பாடம் நடத்தினால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆவது?" என்று அங்கிருந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

வீடியோ வைரல்

ஆசிரியர் போதையில் பெஞ்ச்சில் கிடக்கும் காட்சியை அங்கிருந்த பெற்றோர் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் மற்றொரு ஆசிரியர் ராமு கூட்டத்தை நடத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பணியிடை நீக்கம்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி, உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இதுபோன்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.