திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற சுவாமி புஷ்கரணி (தெப்பக்குளம்) வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை மொத்தம் 40 நாட்களுக்கு மூடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் புனித நீராட தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியின் போது சுவாமி புஷ்கரணி குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, குளத்து நீரை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க தேவஸ்தான நீர்வழங்கல் துறை இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.
இதன்படி, ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரையிலான 40 நாட்களில், புஷ்கரணியில் உள்ள லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரும் முழுமையாக வெளியேற்றப்படும். குளத்தின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள பாசிகள், சேறுகள் அகற்றப்பட்டு தூர்வாரப்படும். மேலும் குழாய்களில் உள்ள பழுதுகள் சரி செய்யப்பட்டு, வர்ணம் பூசும் பணிகளும், சிதிலமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளன.
புஷ்கரணி குளம் மூடப்படுவதால், அங்கு மாலையில் வழக்கமாக நடத்தப்படும் "புஷ்கரணியில் ஆரத்தி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 10-ந்தேதிக்கு பிறகு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, சுத்தமான நீர் நிரப்பப்பட்ட பின்பே பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள்.