திருப்பதி,
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக விபத்துகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும் நிலையில், திருப்பதியில் முதன்முறையாக புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. திருமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
திருமலை மலைப்பாதையிலோ அல்லது திருப்பதி தேவஸ்தான எல்லைக்குட்பட்ட பகுதிகளிலோ எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மரணமடையும் பக்தர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விபத்தினால் உடல் ஊனமுற்றால் ரூ. 5 லட்சம் வரையிலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வரையிலும் மருத்துவ உதவி வழங்க இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டு திட்டத்திற்காக பக்தர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கான முழு பிரீமியம் தொகையையும் தேவஸ்தான நிர்வாகமே எல்.ஐ.சி நிறுவனத்திற்கு செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் மட்டுமின்றி, எவ்வித டோக்கனும் இல்லாமல் இலவச தரிசன வரிசையில் செல்லும் ஏழை எளிய பக்தர்கள் உட்பட அனைவருக்கும் இந்த காப்பீடு முற்றிலும் இலவசமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.