புதுடெல்லி,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதனை நிறைவேற்றும் வகையில், இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார்.
அவருக்கு இந்திய பாராஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்ததுடன், தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனை படைத்ததற்காக வாழ்த்துகள்.
உங்களுடைய சிறந்த செயல்பாட்டால் இந்தியா உற்சாகம் அடைந்து உள்ளது. நீங்கள் படைத்த அற்புத சாதனையால், மேடையில் நமது மூவர்ண கொடி உயர பறக்கிறது என அவர் தெரிவித்து உள்ளார்.