தேசிய செய்திகள்

அமித்ஷா வருகையையொட்டி புதுவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

விழாவில் பங்கேற்க வரும் பொதுமக்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

அமித்ஷா வருகையையொட்டி புதுவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை யொட்டி புதுவையில் நாளை (சனிக்கிழமை )மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை பிற்பகல் 2 மணி முதல் புதுச்சேரி விமான சாலை, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி சந்திப்பு, குளூனி பள்ளி, கிழக்கு கடற்கரை சாலை, கொக்குபார்க் சந்திப்பு, ராஜீவ்காந்தி சதுக்கம், வழுதாவூர் சாலையிலும், நாளை மறுநாள் காலை 5.30 மணிமுதல் அக்கார்டு ஓட்டல், எல்லைப்பிள்ளைச்சாவடி, மற்றும் அதனை ஒட்டிய சாலைகள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலை, கஸ்தூரிபாய் சந்திப்பு, சுப்பையா திருமண நிலையம், அப்பா பைத்தியசாமி கோவில் சந்திப்பு, ஆயுதப்படை நுழைவுவாயில் முதல் புதுச்சேரி விமான நிலைய சாலை வரை போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளன.

வாகன நிறுத்தம்

கிழக்கு கடற்கரை சாலைவழியாக கோட்டக்குப்பத்தில் இருந்து சிவாஜி சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழைமாரியம்மன் கோவில் சந்திப்பு வழியாகவும், சிவாஜி சிலையிலிருந்து மடுவு பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் கிருஷ்ணா நகர் சந்திப்பில் இருந்து மாறி செல்ல வேண்டும்.

மேட்டுபாளையத்தில் இருந்து ஜிப்மர் மற்றும் கோரிமேடு நோக்கி செல்லும் வாகனங்கள் மேட்டுப்பாளைம் சந்திப்பில் உள்ள கனரக வாகன முனையம் வழியாகவும், பைபாஸ் சாலையில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் கனரக லாரி முனையம்- குண்டுசாலை- இந்திரா காந்தி சதுக்கம் வழியாகவும், வழுதாவூர் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் மற்றும் காமராஜ் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் குண்டு சாலை சந்திப்பு வழியாக இந்திரா காந்தி சதுக்கம் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆயுதப்படை மைதானம் முதல் கஸ்தூரிபாய் நகர் சந்திப்பு மற்றும் சர்வீஸ் சாலைகளில் முழுமையாக வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பொதுமக்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.