ஹமீர்பூர்
உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் படகோட்டி மற்றும் 9 பேர் இருந்தனர். அவர்கள் ரிவர் ஐலேண்ட் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
ஆற்றின் நடுவில் படகு வந்தபோது, இரவு 7 மணியளவில் திடீரென சமநிலையை இழந்து படகு கவிழ்ந்தது. இதில் படகோட்டி தீரு, போராடி 3 பேரை உயிருடன் மீட்டார். எனினும், மற்றவர்களை காணவில்லை. சம்பவம் பற்றி அறிந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், படகு விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் ஆகான்க்சா (வயது 9) மற்றும் ராணி (வயது 9), லபியான்ஷ் (வயது 5), மகேஷ் (வயது 6) மற்றும் ஆதித்யா (வயது 11) என தெரிய வந்துள்ளது. தவிர, பிரிஜ்ராணி என்ற இளம்பெண்ணும் (வயது 25) விபத்தில் பலியானார்.
இந்த மீட்பு பணியின்போது கனமழை பெய்தது. எனினும், சவாலான சூழலிலும் அவர்கள் அனைவருடைய உடலையும் மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.