தேசிய செய்திகள்

திருவனந்தபுரத்தை உலுக்கிய துயரம்: தம்பதியினர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

தனிமையில் வசித்து வந்த தம்பதியின் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் அதிகம் பழகாமலும், தனிமையிலேயே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை தட்டிப் பார்த்தபோது உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதை நேரத்தில் வீட்டிலிருந்து துர்நாற்றம் அதிகமாக வீச தொடங்கியது. இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் சமையல் அறை மேல் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ரகுநாதன் நாயர் மற்றும் புஷ்பா தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்கள் இறந்து பல நாட்கள் ஆகியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.