மங்களூரு,
உடுப்பியில் மனஅழுத்தத்தால் மாடல் அழகி கிருதி பங்கெரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுப்பி (மாவட்டம்) அடுத்த கல்மடி பகுதியை சேர்ந்தவர் கிருதி பங்கெரா (வயது 27). முன்னாள் ஓட்டல் ஊழியரான இவர், மாடலிங் துறையில் தீவிர ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார். மணிப்பாலில் உள்ள ஓட்டல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஒரு மாதமாக கல்மடியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் தாய் மற்றும் குடும்பத்தினருடன் கிருதி பங்கெரா மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் செல்போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தாயை தள்ளி விட்டு, 'நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' என்று கூறி படுக்கையறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
ஏற்கனவே இதுபோல் அவர் கூறியிருந்ததால், தாய் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கிருதி பங்கெரா அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர். கடந்த சில நாட்களாகவே கிருதி பங்கெரா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் இது குறித்து அவரது சகோதரி மல்பே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கிருதி பங்கெரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாடல் அழகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.