தேசிய செய்திகள்

கர்நாடகாவில் போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயக்கம்

முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

பெங்களூரு,

காவிரி நதி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் முழு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் BMTC, KSRTC மற்றும் தனியார் பேருந்துகள் வழங்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ஆட்டோ, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உணவங்களும் காலை முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பால், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகின்றன. முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், பெங்களூருவில் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு பேருந்துகள் சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அனுமதி அளித்த பின் அவை வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.