புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கை தொடர்ந்து விமானம், ரெயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளன.
எனினும், ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக உள்ளூர் பயணங்களுக்கான விமான சேவை குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து விடாமல் இருப்பதற்காக விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், விமான நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதன்படி, விமான பயணத்தின்பொழுது முக கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் விதிகளை மீறும் பயணிகளை, பயண தடை பட்டியலில் வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று விமான நிறுவனங்கள், முன்பே அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ், உணவு பொருட்கள் மற்றும் பானங்களை உள்ளூர் விமானங்களில் பரிமாறவும் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை சர்வதேச விமானங்களில் பரிமாறவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.