அகர்தலா,
திரிபுரா மாநில காவல்துறை டிஜிபி அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். டிஜிபியின் உடலை மீட்டு அகர்தலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், அவரது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வுக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் தெளிவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை தலைமையக வளாகம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹாவும் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்தார்.
1994-ம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் தங்கர், கடந்த ஆண்டு திரிபுரா மாநில டிஜிபியாக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணியில் ஏற்பட்ட அழுத்தமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.