தேசிய செய்திகள்

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்... ‘பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது’ - பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது, பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா மட்டுமின்றி, உலகத்தையே கதிகலங்கச் செய்த இந்த கோரத் தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினமான இன்று, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“கோரமான 9/11 தாக்குதல்கள் நடந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதோடு, அந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் நீங்கா நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்.

உலகம் முழுவதும் பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, பல தசாப்தங்களாக இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து உருமாறி வந்தாலும், அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிரான இந்தியாவின் உறுதியும் எதிர்ப்பும் மாறாமல் உள்ளன. இந்த தீமையை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2014-ம் ஆண்டில் 9/11 நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT