தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கபு வனப்பகுதி அருகே அமைந்துள்ள கிராமம் தஹலொன். இந்த கிராமத்தை சேர்ந்த சகுந்தலா பாய் (வயது 37) என்ற பெண் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

2 பேர் பலி

அப்போது அவரது வீட்டை முற்றுகையிட்ட காட்டுயானை கூட்டம் வீட்டை இடிக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சகுந்தலா தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓட முயன்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காட்டு யானை சகுந்தலாவை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். சகுந்தலாவின் மகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதேபோல், அதேமாவட்டத்தின் அரனுரா கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பந்தன் சிங் இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை பந்தன் சிங்கை தாக்கியது. இந்த சம்பவத்தில் பந்தன் சிங் உயிரிழந்தார். ஒரே நாளில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.