பாட்னா,
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தின் ஜமால்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமம் தர்வாரா. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஆற்றை கடப்பதற்காக சுமார் 10 பேர் படகில் சவாரி செய்தனர். அப்போது ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக சற்று வலுவான நீரோட்டம் காணப்பட்டது. ஆற்றின் வலுவான நீரோட்டத்தால் தள்ளாடிய படகு சிறிது நேரத்தில் கவிழ்ந்தது.
படகிலிருந்த அனைவரும் கத்தி கூச்சலிட்டபடியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் 7 பேர் நீந்தி ஆற்றின் கரையை வந்தடைந்து உயிர் தப்பினர். ஆனால் தர்வாராவைச் சேர்ந்த 11 வயது சிறுமி நேஹா குமாரி, கஞ்சன் தேவி, குபௌல் கிராமத்தைச் சேர்ந்த மீரா குமாரி ஆகிய 3 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) நீர்மூழ்கி வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் படகோட்டிகளும் அவர்களுக்கு உதவியாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.