புதுடெல்லி
டெல்லியில் தெளிவற்ற வானிலையால், விமான பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. டெல்லியின் பல்வேறு நகரங்களில் நீடித்து வந்த வெப்பநிலையால் மக்கள் தவித்து வந்து சூழலில், நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.
இதேபோன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததுடன், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. இதனால், டெல்லி நகரின் பல பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வளிமண்டல நிலையற்ற தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டெல்லி மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்றும், நாளையும் பகுதியளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனை முன்னிட்டு, டெல்லியில் விமான இயக்கங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளது. நிலைமை மேம்பட்டதும் அதுபற்றிய தகவலை எங்களுடைய குழுக்கள் கண்காணித்து, உங்களுக்கு தெரிவிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
நீங்கள் இன்று பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், உங்களுடைய விமானத்திற்கான நிலையை பற்றி இணையதளங்கள் அல்லது செயலிகளுக்கு சென்று பரிசோதனைசெய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய பொறுமையையும், புரிதலையும் நாங்கள் பாராட்டுகிறோம். உங்களுடைய வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே எப்போதும் எங்களுடைய முன்னுரிமையாகும் என தெரிவித்து உள்ளது.